தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் தவெக அரசின் முடிவுக்கு, சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தனது திரைப்படத்தைத் தயாரித்தார் என்ற ஒரே காரணத்திற்காக முக்கியத்துவம் வாய்ந்த அரசுப் பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் நியமித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.
மேலும், காவிரி நீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு–கர்நாடகா இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வரும் சூழலில், கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவரை தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியாக நியமித்திருப்பது ஏற்க முடியாதது என விமர்சித்துள்ளார்.
தமிழ் மொழியே அறியாதவர்களை தமிழ்நாட்டின் பிரதிநிதியாக நியமிப்பது தமிழர்களை அவமதிப்பதாகவும், இது வெளிப்படையான அதிகார முறைகேடு என்றும் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான ஒருவரை அந்தப் பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்று தவெக அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.