தமிழ்நாடு வல்கனைசிங் பழுது பார்க்கும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மடத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்டத் தலைவர் செ.கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.எஸ்.தங்கம், பொருளாளர் சரவணன், துணைத் தலைவர் செண்பகராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குத்துவிளக்கேற்றி, தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது.

சிறப்பு விருந்தினர்களாக மாநிலத் தலைவர் எஸ்.முத்துராஜ், மாநிலப் பொதுச் செயலாளர் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டு சங்கத்தின் வளர்ச்சி மற்றும் தொழிலாளர்களின் நலன் குறித்து ஆலோசனைகளை வழங்கினர். மதுரை சொக்கலிங்கம் வரவேற்புரையாற்றினார்.

மாவட்டத் தலைவர் செ.கண்ணன் பேசுகையில், தன்னை மாவட்டத் தலைவராக தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும், “நான் மட்டும் தலைவர் இல்லை; இங்கு வந்திருக்கும் நீங்கள் அனைவரும் தலைவர்கள்தான். அனைவரும் ஒற்றுமையுடன், முழு ஒத்துழைப்புடன் செயல்பட்டு சங்கத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வோம்” என்று தெரிவித்தார்.
மாநில நிர்வாகிகள் பேசுகையில், சங்க உறுப்பினர்களுக்கு காப்பீடு வழங்கவும், தொழிலாளர் நல வாரியத்தில் அனைவரையும் விரைவில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.
கூட்டத்தில் தொழிலாளர்களின் நலன் தொடர்பாக 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டனர். தொடர்ந்து அனைவருக்கும் மதிய உணவாக பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.
கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டுமின்றி திண்டிவனம், மதுரை, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மாவட்டப் பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்