தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் அளித்த கோரிக்கையைத் தொடர்ந்து, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் அரசியல் பாரபட்சமின்றி தேவையான கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டு கோடைகால பருவமழை குறைந்ததால் வல்லநாடு ஆற்றுப்படுகையில் குடிநீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மாநகராட்சி பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் பிரச்சினை தொடர்ந்து நிலவி வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தாலும், சில பகுதிகளில் குடிநீர் முழுமையாக கிடைக்கவில்லை என்றும், சில இடங்களில் பாதியளவு மட்டுமே குடிநீர் வருவதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளன, இதுதொடர்பாக ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாநகராட்சிக்குட்பட்ட 19-வது வார்டு கே.வி.கே. நகர், மகிழ்ச்சிபுரம், பக்கிள் ஓடையை ஒட்டிய அண்ணாநகர் பகுதி மற்றும் நான்காவது ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வரவில்லை என பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து மேயர் ஜெகன் பெரியசாமி இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சுமார் 3 மணி நேரம் இருசக்கர வாகனத்தில் டார்ச் லைட்டுடன் அப்பகுதிகளில் தெருத்தெருவாக சென்று ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு பகுதியாக சென்று பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் குறித்த விவரங்களை கேட்டறிந்ததுடன், வீடுகளுக்கு நேரில் சென்று குடிநீர் வருகிறதா என்பதையும் பார்வையிட்டார்.

பின்னர் பொதுமக்களிடம் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, குடிநீர் வராத தெருக்களுக்கு உடனடியாக லாரிகள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், குடிநீர் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு காணும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு அதன் மூலம் நிரந்தரமாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
புதிய குழாய் பதிக்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் முடிக்கப்படும் என்றும், அதன்பிறகு குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் மேயர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக இரவாக இருந்தாலும் பகலாக இருந்தாலும் மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவது எங்களது கடமை. மாநகராட்சி தொடர்பான எந்த கோரிக்கையாக இருந்தாலும் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொண்டு பேசலாம்” என்றார்.
ஆய்வின்போது பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் செல்வின், கவுன்சிலர்கள் கனகராஜ், சோமசுந்தரி, கந்தசாமி, வட்டச்செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.