தூத்துக்குடி மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்றம் சார்பில், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தவெகவில் இணைந்ததை கண்டித்து தூத்துக்குடி யூனியன் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சராகவும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சி பொருளாளராகவும் பதவி வகித்த கடம்பூர் ராஜூ, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு பெற்ற அவர், முதல் வேட்பாளர் பட்டியலிலும் இடம்பெற்றிருந்தார். தேர்தல் முடிவில் அவர் தோல்வியடைந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 06.06.2026 அன்று தவெக பொதுச்செயலாளர் அமைச்சர் ஆனந்த் தலைமையில் தவெகவில் இணைந்தார். இந்த நடவடிக்கை அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தூத்துக்குடி மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்றம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், “பல ஆண்டுகள் கட்சியிலும் அமைச்சர் பதவியிலும் சுகத்தை அனுபவித்து விட்டு தற்போது கட்சியை விட்டு தவெகவில் இணைந்துள்ளார்” எனக் கூறி கடம்பூர் ராஜூவுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் கோசல்ராம் ராஜா, ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிவ மாடசாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜாக்சன் துரைமணி, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் தங்கம் டி.முருகேசன், மாவட்ட இளம் பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை இணைச் செயலாளர் முத்துப்பட்டன், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் தங்கத்துரை, அம்மா பேரவை இணைச் செயலாளர் முத்துராமலிங்கம், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செல்வ விக்னேஷ், கூட்டாம்புளி சுப்புநாராயணன், வேல்சாமி, சேர்வலார்மடம் அந்தோணி ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.